இலங்கை
பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில இது ஓர் அரசியற் சூழ்ச்சியே!
பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில இது ஓர் அரசியற் சூழ்ச்சியே!
அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
பிள்ளையானின் சட்டத்தரணியாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில செயற்படுவதுகூட ஒருவகையான அரசியல் சூழ்ச்சியாகும். எனினும், எமது ஆட்சியின்கீழ் கடந்த கால சம்பவங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணைக்குழு நடவடிக்கை எடுத்துவருகின்றது. கடந்த காலங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட கோப்புகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதேபோல குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை துரிதப்படுத்தி வருகின்றது. சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு சட்டத்தின் பக்கம் செய்ய வேண்டிய பணிகள் துறைசார் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த நிறுவனங்களுக்குரிய வளங்களை மட்டுமே அரசாங்கம் வழங்கிவருகின்றது.
அதேவேளை, பிள்ளையானின் சட்டத்தரணியாக தற்போது கம்மன்பில செயற்படுகின்றார். கம்மன்பில வழக்குகளில் வாதாடுவதை எமது நாட்டு மக்கள் கண்டிருக்க மாட்டார்கள். எனினும், தனது சட்டத்தரணியாக கம்மன்பிலவை பிள்ளையானும் ஏற்றுள்ளார். இது சூழ்ச்சியாகும். கடந்தகால சம்பவங்களின் முடிச்சுகளைதான் நாம் தற்போது அவிழ்த்து வருகின்றோம்’ – என்றார்.