இலங்கை
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் பொலிஸார் அராஜகம்; இளைஞனை இழுத்துச்சென்ற பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் பொலிஸார் அராஜகம்; இளைஞனை இழுத்துச்சென்ற பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி இளைஞன் ஒருவரை துப்பாக்கி முனையில் பொலிஸார் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பை மருதங்கேணி பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தச் சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை.
இதனையடுத்து துப்பாக்கிகளுடன் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார், சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், தான் இப்போது வேட்பாளர் இல்லை என கூறி, சந்திப்புக்கு வரவில்லை என பதிலளித்தார்.
இந்நிலையில் தாங்கள் அழைத்தால் பொலிஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், தனது தாயை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொலிஸாரிடம் கோரியபோது, அவருடனும் பொலிஸார் முரண்பட்டனர்.
அதன் பின்னர், மேலங்கி இல்லாமல், சாரத்துடன் குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார், சாரத்தைப் பிடித்து இழுத்துச் செல்லும்போது சாரம் அவிழ்ந்ததை பொருட்படுத்தாது பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
இந்நிலையில் மேலங்கி இல்லாமல், சாரம் அவிழ்ந்த நிலையில் வீதியில் இளைஞனை பொலிஸார் இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பல தரப்பினரும் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.