இலங்கை
வாக்காளர் அட்டைகளுடன் சிக்கிய வேட்பாளர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வாக்காளர் அட்டைகளுடன் சிக்கிய வேட்பாளர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட புத்தளம் பிரதேச சபை வேட்பாளரை இரு சரீரப் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.
85 அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகளை வைத்திருந்ததற்காக, குறித்த வேட்பாளர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ரத்மல்யாய பிரதேசத்திற்கு கடிதங்களை விநியோகிக்கும் தபால் ஊழியர், குறித்த அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்குமாறு தன்னிடம் வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
கிராமத்தில் உள்ள குழுவொன்று மரண வீடொன்றுக்கு சென்றுள்ளதன் காரணமாக, அவர்களது வாக்காளர் அட்டைகளை வழங்க முடியாததால், அவற்றை தன்னிடம் வழங்கியதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இதற்கு முன்னரும் தபால் ஊழியர் தன்னிடம் வழங்கும் கடிதங்களை தான் கிராம மக்களுக்கு வழங்கி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.