இலங்கை
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9லட்சத்து 30 ஆயிரத்து 794 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவிரைவில் ஒரு மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அச்சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு இதுவரையில் 930,794 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். சராசரி தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 5,000 ஆகக் காணப்படுகிறது. மேலும், மே 2025 முதல் வாரத்திற்கான சுற்றுலாப்பயணிகளின் வருகைகள் முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 இல் 18,761 மற்றும் 2024 இல் 28,526 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இவை இவ்வாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கின்றன.
இதற்கிடையில், 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 1,379 மில்லியன் டொலர்களாக இருந்ததாகவும், இது 2024 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 1,251.6 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 10.2 சதவீத அதிகரிப்பை பிரதிபலிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.