இலங்கை
ராஜபக்சக்களின் குடும்பத்தினர் இனப்படுகொலையாளிகளே
ராஜபக்சக்களின் குடும்பத்தினர் இனப்படுகொலையாளிகளே
தூபிக்கான எதிர்ப்பால் பெருமிதம் மேயர் பற்றிக் பிரவுண் அதிரடி!
ராஜபக்சக்களின் குடும்பத்தால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள், போல்பொட், ஸ்லோபடான் மிலோசோவிக், ஹென்றிச் ஹிம்லர் மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்துக்கு எதிரான மோசமான குற்றங்களுக்கு நிகரானவை – இவ்வாறு காட்டமாக விமர்சித்துள்ளார் கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண்.
பிரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள, தமிழர் இனப்படுகொலை நினைவாலயத்துக்கு நாமல் ராஜபக்ச கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடியாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்குக் கிடைத்த கௌரவமாகும். தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு, அந்த குடும்பத்தின் கரங்களால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை.
ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால்;, நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பியோடாமல் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஆனால், அந்தக் குடும்பம் அரச பாதுகாப்பிலும், ஆடம்பரத்திலும் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம்.
ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போல்பொட், ஸ்லோபடான் மிலோசோவிக், ஹென்றிச் ஹிம்லர் மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கு மோசமானவை. ஆதலால், கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத் தூபிக்குக் கிடைத்த கௌரவமாகும் – என்றுள்ளது.