இலங்கை
எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஜனநாயகத்துக்கு விரோதம்
எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஜனநாயகத்துக்கு விரோதம்
சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு
உள்ளூராட்சிச் சபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்படும் அரசியல் கூட்டணி தவறானது. அதில் நாம் பங்காளியாகமாட்டோம் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-
இந்தக் கூட்டணி ஜனநாயகத்துககு முரணானது. தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற உள்ளூராட்சிச் சபைகளில் அவர்கள் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. மக்களாணைக்கு அமைய அந்த கட்சி உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கு உள்ளாக்குகின்றோம் என்றுகூறி தேசிய மக்கள் சக்தியை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளார்கள். அதுபோலவே தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றுள்ள 265 உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும்.
ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணை வழங்கியுள்ள தரப்பினர் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும். பலவந்தமான முறையில் மாற்று கருத்துகளுக்கான கிடைத்த வாக்குகளை ஒன்றிணைத்து எதிர்க்கட்சி கூட்டணியமைப்பது சாத்தியமற்றது. தொடர்ச்சியாக எதிர்க்கொள்ளும் பின்னடைவை மீளாய்வு செய்ய வேண்டும்-என்றார்.