இலங்கை
யாழில் பரபரப்பு; கனரக வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
யாழில் பரபரப்பு; கனரக வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற கனரக வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்தனர்.
இதன் போது கனரக வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளது.
இதையடுத்து பொலிஸார் குறித்த கனரக வாகனத்தை தமது வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
எனினும் லொறி வரணி மந்துவில் வீதியால் திரும்பிச் சென்று வேம்பிராய் நோக்கி மிக வேகமாக சென்ற போது லொறியில் பயணித்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டார்ச் லைற் மூலம் பிரகாசமான ஒளியை பாய்ச்சியிருந்தனர்.
இதனால் தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் கனரக வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடியாதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சட்டவிரோத மணலுடன் சென்ற லொறியை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.