இலங்கை
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் – நோய் பரவும் அபாயம்!
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் – நோய் பரவும் அபாயம்!
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பற்ற குப்பை தொட்டியில் உத்தியோகத்தர்கள் குப்பைகளை வீசி செல்வதால் மாடுகள், நாய்கள் அந்த குப்பைத் தொட்டியை அலங்கோலம் செய்து வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாள் என்பதால் நேற்றையதினம் பணிக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள் குறித்த குப்பையை கண்டும் காணாமலும் விட்டுச் சென்றுள்ளனர்.
பிரதேச செயலகம் அமைந்திருக்கின்ற பகுதியில் மருத்துவமனை, உணவகம், காவல் நிலையம், சமூர்த்தி நிலையம், வங்கி, பிரதேச சபை போன்றன காணப்படுவதால் அதிகளவான மக்கள் குறித்த இடத்திற்கு அடிக்கடி வந்து போகிறார்கள். இதனால் குறித்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதால் நாய்கள் குப்பையை கிளறி வருகின்றன. தமது அலுவலகத்திற்கு முன்னால் காணப்படும் குப்பையை சுத்தம் செய்ய முடியாத அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு சமூக அக்கறையுடன் சேவை செய்வார்கள் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.