இலங்கை
இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதலில் பயணி மருத்துவமனையில்
இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதலில் பயணி மருத்துவமனையில்
மட்டக்களப்பு வாழைச்சேனை நாவலடி சந்தியில் தனியார் பேருந்து மற்றும் இ.போ.ச பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் நடத்துனர் அவரின் உதவியாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அக்கரைப்பற்றில் இருந்து வவுனியாவுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தும் அக்கரைப்பற்றில் இருந்து புத்தளத்துக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின்பேருந்தும் சம்பவதினமான இன்று காலை அக்கரைப்பற்றில் இருந்து இரு பேருந்துகளும் ஒரே நேரத்தில் போக்குவத்தை ஆரம்பித்தது.
இதன் போது பயணிகளை ஏற்றும் நடவடிக்கையில் இரு பேருந்துகளுக்கும் முன்னுக்கு பின் போட்டி போட்டுக் கொண்டு பயணித்துள்ளதுடன் இதனால் இரு பேருந்துகளின் நடத்துனர்கள் சாரதிகளுக்குள்ளே பெரும் முறுகல் ஏற்பட்டது.
இதனையடுத்து பயணிகள் காலை உணவு உண்பதற்காக 8.45 மணியளவில் வாழைச்சேனை நாவலடி சந்தியிலுள்ள உணவகத்தில் இரு பேருந்துகளும் முன்னுக்கு பின்னர் நிறுத்திய நிலையில், நடத்துனர்கள் சாரதிகளுக்குள்ளே வாய்த்தர்கம் முற்றி மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதனை தடுக்க சென்ற பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தையடுத்து தனியார் பேருந்தின் நடத்துனர் அவரது உதவியாளர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.