இலங்கை
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம்தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இது குறித்து தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்;
இந்த மருத்துவமனையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரேஒரு புற்றுநோய் மருத்துவமனை ஆகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது மருத்துவமனை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் வாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது.
ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்- என்றார்.
இதன்போது, போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மருத்துவர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.