நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 14/06/2025 | Edited on 14/06/2025
நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் மனோஜ் கே ஜெயன் ஆகியோருக்கு 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது. பின்பு 2008ஆம் ஆண்டு ஊர்வசியும் மனோஜ் கே ஜெயனும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். பின்பு ஊர்வசி, சிவபிரகாஷ் என்பவரையும் மனோஜ் கே ஜெயன், ஆஷா என்பவரையும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்த நிலையில் ஊர்வசிக்கும் மனோஜ் கே ஜெயனுக்கு பிறந்த பெண் குழந்தையான தேஜ லக்ஷ்மி தற்போது கதாநாயகியாக அறிமுகமாகிறார். மலையாளத்தில் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற படம் மூலம் அறிமுகமாகுவதாக அவரது தந்தை மனோஜ் கே ஜெயன் செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து அறிவித்தார். அப்போது அவர் மிகவும் எமோஷ்னலாக காணப்பட்டார். பின்பு அவரை மகள் தேஜ லக்ஷ்மி தேற்றினார். பின்பு மகள் தேஜ லக்ஷ்மி நடிக்கிறேன் என சொன்னவுடன் ஊர்வசியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வருமாறு சொன்னதாக மனோஜ் கே ஜெயன் கூறினார்.
‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ படத்தை முகமது சலீ தயாரிக்க அறிமுக இயக்குநர் பீனு பீட்டர் கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் லீட் ரோலில், தேஜ லக்ஷ்மி நடிக்கிறார். அதாவது டைட்டில் ரோலான சுந்தரியாயவள் ஸ்டெல்லா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சர்ஜானோ காலித் நாயகனாக நடிக்கிறார். ஸ்ரீநாத் சிவசங்கரன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.