நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 13/06/2025 | Edited on 13/06/2025
ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கட்ஸ்’. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதா? இல்லையா?
நாயகன் ரங்கராஜ் மற்றும் ஸ்ருதி நாராயணன் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த சமயத்தில் நாயகன் ரங்கராஜை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்து விடுகின்றனர். இதன்பின் ஸ்ருதி நாராயணன் தன் மகனை தனியாக வளர்க்கிறார். அந்த சமயம் ஒரு போலீஸ் அதிகாரியால் ஸ்ருதி நாராயணனுக்கு பிரச்சனை ஏற்பட அவரை கொலை செய்வதற்கு முன் இந்த உலகத்தில் நாம் யாரையாவது தட்டிக் கேட்க வேண்டும் என்றால் அதற்கு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என சொல்லிவிட்டு தன் மகனை நிர்கதியாக்கி அந்த போலீசை கொலை செய்ய செல்லும் ஸ்ருதி நாராயணன் அவரை கொலை செய்துவிட்டு அங்கேயே அவரும் மரணித்து விடுகிறார்.
இதைத் தொடர்ந்து அந்த மகன் வளர்ந்து பெரிய போலீஸ் அதிகாரியாக உருவெடுக்கிறார். அவர் அனாதை ஆசிரமத்தில் பணிபுரியும் அனாதை பெண்ணான நான்சியை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அந்த சமயம் அவரது மனைவியை ஒரு மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்து விடுகிறது. இதைத் தொடர்ந்து தன் தந்தையின் கொலைக்கும் தன் மனைவியின் கொலைக்கும் ஒரே ஆள் சம்பந்தப்பட்டிருப்பதை நாயகன் ரங்கராஜ் கண்டுபிடிக்கிறார். இதை அடுத்து அந்த கொலையாளி யார்? கொலையாளியை கண்டுபிடித்து ரங்கராஜ் தண்டித்தாரா, இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை?
தமிழ் சினிமாவில் வழக்கமான கதையம்சம் கொண்ட படங்கள் அவ்வப்போது வெளியாகி ஓர் அளவு வரவேற்பு பெற்று காணாமல் போய்விடுகிறது. அந்த வரிசையில் தற்பொழுது இந்த கட்ஸ் படமும் இணைந்து இருக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு கதையை வழக்கமான திரைக்கதை அம்சங்களோடு புதுமுக நடிகர்களை வைத்துக் கொண்டு காட்சிகளை நகர்த்தி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ரங்கராஜ். இவரே படத்தின் நாயகனாகவும் நடித்திருப்பதால் தனக்கு ஏற்றார் போல் கதையை உருவாக்கிக் கொண்டு அதில் நடித்து அதன் மூலம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
பெரிய கமர்சியல் ஹீரோ நடிக்க வேண்டிய இந்த கதையை தானே நாயகனாகவும் இயக்குநராகவும் இருந்து உருவாக்கி அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் தன் நடிப்பின் மூலம் பல காட்சிகளை சிறப்பாக கையாண்டு ஓரளவு ரசிக்கவும் வைத்திருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் ரங்கராஜ் அதன் மூலம் படத்தையும் ஓரளவு கரை சேர்க்கவும் முயற்சி செய்திருக்கிறார். இருந்தும் கதை தேர்வில் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம்.
நாயகன் இயக்குநர் என இரு அவதாரம் எடுத்திருக்கும் ரங்கராஜ் தனக்கு என்ன வருமோ அதை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். நாயகி ஸ்ருதி நாராயணன் முதல் திரைப்படம் என்று தெரியாதளவுக்கு நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரசிகர்கள் இவரை எதிர்பார்க்கும் அளவுக்கு இந்த படத்தில் இல்லாமல் வேறு ஒரு கோணத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். நாயகனின் மாமாவாக வரும் சாய் தீனா படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்து படத்தையும் தூக்கி நிறுத்த உதவியிருக்கிறது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பிர்லா போஸ் அறந்தாங்கி நிஷா உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.
மனோஜ் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் சிறப்பு. ஜோஸ் பிராங்க்ளின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே. வழக்கமான பழிவாங்கல் கதையை வைத்துக்கொண்டு இந்த படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கூட சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் இந்த படம் நன்றாக கவனிக்கப்பட்டு இருக்கும்.
கட்ஸ் – இன்னமும் கட்ஸ் தேவை!