விளையாட்டு

ரெய்டு மெஷின்… ஒரே சீசனில் 227 புள்ளிகள்: தமிழ் தலைவாஸ் கரங்களை வலுப்படுத்த போகும் அர்ஜுன் தேஷ்வால்!

Published

on

ரெய்டு மெஷின்… ஒரே சீசனில் 227 புள்ளிகள்: தமிழ் தலைவாஸ் கரங்களை வலுப்படுத்த போகும் அர்ஜுன் தேஷ்வால்!

புரோ கபடி லீக் தொடரின் 12-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிறப்பாக கவனம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி அதிரடியாக வீரர்களை வசப்படுத்தியது. குறிப்பாக, புரோ கபடி முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் அர்ஜுன் தேஷ்வாலை  ரூ. 1.405 கோடிக்கு வாங்கியது. இதேபோல், முன்னணி வீரர் பவன் செஹ்ராவத்தை 59.50 லட்சத்துக்கு வாங்கினர். மேலும் அலிரேசா கலிலி (30.20 லட்சம்), மோஹித் (13 லட்சம்), சுரேஷ் ஜாதவ் (9.50 லட்சம்) ஆகியோரையும் வாங்கினர். இந்த வீரர்களை கொண்டு வலுவான அணியை கட்டமைக்க உள்ளனர். இதற்காக தற்போது புதிய பயிற்சியாளர்களையும் தமிழ் தலைவாஸ் அணி நியமித்துள்ளது. புதிய தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பாலியன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். உதவிப் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் அணியில் இணைந்துள்ளார்.ரெய்டு மெஷின்தனது சிறப்பான ரைடு மற்றும் துல்லியமான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற அர்ஜுன் தேஷ்வால், ‘ரெய்டு-மெஷின்’ என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளார். உத்தரபிரதேசத்தின் பாசியாவைச் சேர்ந்த 25 வயதான இவர், சீசன் 9 இல் சிறந்த வீரராக ஜொலித்தார். அந்த சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இரண்டாவது பட்டம் வெல்ல பெரிதும் பங்காற்றினார். இதேபோல், கடந்த சீசனில் சிறப்பாக ஆடி 227 ரெய்டு புள்ளிகளை பெற்றுள்ளார். மேலும், அர்ஜுன் தேஷ்வால் இதுவரை 114 போட்டிகளில் ஆடி 1,174 ரெய்டு புள்ளிகளுடன், புரோ கபடி லீக் தொடரின் பிரபலமான வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் 9.86 என்ற சராசரியில் 230 புள்ளிகளையும் பெற்றுள்ளார். சாதனைகள் அர்ஜுன் தேஷ்வால் கடந்த சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக ஆடி  யுபி யோதாஸை வென்றபோது 1000 ரெய்டு புள்ளிகளை எட்டினார். தொடர்ந்து, அதே சீசனில் அவர் 1100 ரெய்டு புள்ளிகளை எட்டினார். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இளைய வீரர் ஆனார்.புரோ கபடி தொடரில் யு மும்பா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளாக ஆடியுள்ள அவர், உத்தரபிரதேச காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி) பதவி பெற்றுள்ளார். அர்ஜுன் தேஷ்வால் உத்தரகண்ட் மாநில அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2019 இல் உத்தரகண்ட் மாநில அணிக்காக விளையாடியுள்ளார். தொடர்ந்து, இந்திய தேசிய அணியிலும் அவர் இடம் பிடித்தார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 2023 ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய தேசிய அணியில் அவர் இடம் பெற்றவர். புரோ கபடி தொடருக்கான சீசன் 9-ல் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்கிற பட்டத்தை வென்றார். சீசன் 10 இல் கூட்டு அதிக ரெய்டு புள்ளிகள் எடுத்தவராக சாதனை படைத்தார். தற்போது, இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் இணைந்திருக்கிறார். அவர் அணி கோப்பை கோப்பை கனவை நெருங்க உதவுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version