இலங்கை
விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி ஜேர்மனிக்குப் பயணம்!
விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி ஜேர்மனிக்குப் பயணம்!
புரளியை கிளப்புகின்றார் கம்மன்பில
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்குச் சென்றுள்ளார் என்று சமூகவ லைத்தளங்களில் கருத்துகள் வெளியாவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஜேர்மனியில் சான்சலர்தான் அரசாங்கத்தின் பிரதானி. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜேர்மனியப்பயணத்தின் போது சான்சலர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் இல்லை எனக் கூறப்படுகின்றது. அப்படியானால் இந்தப் பயணத்தில் வேறு நோக்கம் இருக்கக்கூடும்.
எமது நாட்டில் ஜனாதிபதிதான் அரசதலைவர். எனவே, அவர் வெளிநாடு சென்றால் அந்த நாட்டிலுள்ள அரச தலைவரை சந்திக்கவேண்டும். ஐரோப்பாவிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட விஜயமா இது என்ற கேள்வியும் எழுகின்றது. புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான நெடியவன் ஜேர்மனிக்குச் செல்லவுள்ளார். அவர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்தால் அது பெரும் பிரச்சினையாகக் கூடும் என்பதால், நெடியவனைச் சந்திக்கவே ஜனாதிபதி ஜேர்மனிக்குச் சென்றுள்ளார் என சில அரசியல்வாதிகளும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். அரசியல் களத்தில் உலா வரும் கதைகளே இவை. இவற்றின் உண்மைத்தன்மை என்னவென்பதை ஜனாதிபதியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் – என்றார்.