இலங்கை
பவுண்டரி கேட்ச் ; புதிய விதி சொல்வது என்ன?
பவுண்டரி கேட்ச் ; புதிய விதி சொல்வது என்ன?
கிரிக்கெட் விளையாட்டில் பவுண்டரி லைனை ஒட்டி நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பது சார்ந்து ஏற்கெனவே உள்ள விதியை திருத்தம் செய்து புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி). அது குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2023 பிக் பேஷ் லீக் கிரிக்கெட் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் நெசர், பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச்சினை ரெபரான்ஸாக எடுத்துள்ளது ஐசிசி.
அதாவது பந்தை கேட்ச் செய்ய இரண்டு முறை பவுண்டரி லைனுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று, பந்தை பிளேவில் வைத்திருந்தார் நெசர். இது தற்போது உள்ள விதி எண் 19.5.2 படி செல்லும்.
ஆனால், எம்சிசி கொண்டுவந்துள்ள புதிய விதி காரணமாக இனி இது செல்லாது. விரைவில் இந்த விதி அமலுக்கு வர உள்ளது.
புதிய விதி சொல்வது என்ன? – எல்லையில் கேட்ச் பிடிப்பது சார்ந்து ஏற்கெனவே உள்ள விதியை திருத்தி புதிய விதியை எம்சிசி. அதன்படி எல்லை கோட்டுக்கு அருகே நிற்கும் ஃபீல்டர் பந்தை கேட்ச் செய்யும் போது பேலன்ஸை இழந்தால் பந்தை பிடித்து ஆட்ட களத்துக்குள் எறிந்து விட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியில் செல்லலாம்.
ஆனால், இரண்டாவது முறை பந்தை கேட்ச் செய்யும் போது அந்த வீரர்கள் பவுண்டரி லைனுக்கு உள்ளே இருக்க வேண்டும்.
அதே போல ‘ரிலே கேட்ச்’ செய்யும் போது பவுண்டரி லைனில் நிற்கும் ஃபீல்டர் பந்தை களத்துக்குள் இருக்கும் மற்றொரு வீரரை நோக்கி எறியலாம்.
ஆனால், அவர் பந்தை பிடிக்கும் போது பவுண்டரி லைனுக்கு வெளியில் சென்ற வீரரும் களத்துக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் அது அவுட் என அறிவிக்கப்படும்.
இல்லையென்றால் அது பவுண்டரி என அறிவிக்கப்படும்.
இதன் மூலம் இனி பவுண்டரி லைனில் ‘பன்னி ஹாப்’ (பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே, வெளியே என காற்றில் பறந்து பிடிப்பது) முறை முற்றிலும் நீக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த விதி ஜூன் 17-ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் கீழ் இலங்கை – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி இந்த விதியின் கீழ் விளையாடப்பட உள்ள முதல் சர்வதேச போட்டியாக அமைகிறது. எம்சிசி விதிகளில் ஒக்டோபர் மாதம் இது இடம்பெறும் என தெரிகிறது.