விளையாட்டு

சர்வதேச தரம், இந்திய வீரர்களுக்கு அரிய வாய்ப்பு… ரக்பி லீக் குறித்து பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் உரிமையாளர் பேட்டி

Published

on

சர்வதேச தரம், இந்திய வீரர்களுக்கு அரிய வாய்ப்பு… ரக்பி லீக் குறித்து பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் உரிமையாளர் பேட்டி

கிரிக்கெட்டை நேசிக்கும், சுவாசிக்கும் நாடாக இருந்த இந்தியா, இப்போது மெல்ல மெல்ல மற்ற விளையாட்டுகள் மேலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. கிரிக்கெட்டுக்கும் அதில் ஆடும் வீரர்களுக்கும் கிடைக்கும் வெளிச்சம், மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட நெடிய காலமாக இருந்து வருகிறது. ஆனால், இணையம் மற்றும் சமூக ஊடங்களின் அதிகரிப்பால் தற்போது அந்தக் குற்றச்சாட்டுகளை அடுக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தவிர, ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரைப் போல் மற்ற விளையாட்டுகளும் லீக் போட்டிகளில் அடியெடுத்து வைத்துள்ளன. அவற்றுக்கும் இந்திய மக்கள் தங்களின் ஏகோபித்த வரவேற்பை அளித்து வருகிறார்கள். குறிப்பாக, புரோ கபடி, இந்தியன் சூப்பர் லீக் உள்ளிட்ட லீக் தொடர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, லீக் போட்டிகளில் முத்திரை பதித்து வருகின்றன. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) முதல் மும்பையின் அந்தேரி விளையாட்டு வளாகத்தில் அரங்கேறி வரும் ரக்பி பிரீமியர் லீக் (ஆர்.பி.எல்) ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தொடரில் டெல்லி ரெட்ஸ், ஐதராபாத் ஹீரோஸ், கலிங்கா பிளாக் டைகர்ஸ், சென்னை புல்ஸ், மும்பை ட்ரீமர்ஸ், பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் களமாடியுள்ளன. மற்ற லீக் போட்டிகளைப் போல, இந்தப் போட்டியும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆர்.பி.எல் தொடரின் தொடக்க சீசன் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள நாம் ‘பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ்’ அணியின் இணை உரிமையாளர் சஞ்சித் ஷெட்டியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். அவர் நமது கேள்விகளுக்கு பொறுமை கலந்த புன்முறுவலுடன் பதில் அளித்தார். இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- இந்தியாவில் தற்போது முதன்முறையாக ரக்பி பிரீமியர் லீக் தொடங்கப்பட்டு இருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த நானும் மற்றும் இந்த விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட மணிப்பால் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரஞ்சன் பாய், இன்க்ரெட் பின்டெக் நிறுவனத்தின் தலைவர்  பூபிந்தர் சிங் ஆகியோரும் உரிமையாளர்களாக இருக்கிறோம். இந்த விளையாட்டுடன் எங்களுக்கு நீண்ட நெடிய தொடர்பு இருக்கிறது. ரக்பியில் இரண்டு வகை இருக்கிறது. 15 பேர் கொண்ட அணியும், 7 பேர் கொண்ட அணியும் உள்ளது. இதில் 7 பேர் கொண்ட 7-ஸ் என அழைக்கப்படும் போட்டியையே நாங்கள் இந்த லீக்கில் விளையாடி வருகிறோம், 7 பேர் எனும் போதும் ஆட்டம் அனல் பறக்கும். பரபரப்பாக இருக்கும் நிற்கக் கூட நேரம் இருக்காது. போட்டி நேரத்தை பொறுத்தவரை மொத்தம் 4 பகுதியாக (குவாட்டர்’ஸ்) பிரிக்கப்பட்டு, ஒரு பகுதிக்கு 4 நிமிடம் வழங்கப்படும். இதில் டைம் அவுட், இடைவேளை என அனைத்தும் சேர்த்து போட்டி 20 நிமிடங்களில் முடிந்து விடும். அடுத்தப் போட்டி 13 நிமிடத்திற்குள் தொடங்கி விடும். தொடரில் ஆடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை இரண்டு முறை சந்திப்பார்கள். ஒவ்வொரு அணிக்கும் தினமும் போட்டி இருக்கும். வருகிற 29 ஆம் தேதி வரை, அதாவது 14 நாட்கள் மட்டுமே போட்டிகள் நடைபெறும். அதனால்தான் சொல்கிறேன், போட்டி மிகவும் வேகமாவும், பரபரப்பாகவும் இருக்கும். அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது. துரஷ்டவசமாக, அந்த அணியின் வெற்றிக்கு கொண்டாட்டத்தின் போது, 11 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர். இதற்கு காரணம் மைதானம் இருந்த பகுதியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டது தான். குறிப்பாக ஒரு நுழைவாயிலின் கேட் திறக்கப்படவில்லை. அதனால், லட்சக்கணக்கில் திரண்ட ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். இதுஒருபுறமிக்க, இந்தியாவில் விளையாட்டுக்கு எந்த அளவுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பது அங்கு திரண்ட கூட்டத்தின் மூலம் நிரூபணமாகிறது. ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த அணிக்காக தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்கள். நீண்ட வருடங்களாக மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். எனவே, ஐ.பி.எல் தொடரில் இந்த ஆண்டு கோப்பை வென்ற நாங்கள் (பெங்களூரு), ரக்பி தொடரின் தொடக்க சீசனிலும் கோப்பை வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.  இந்த விளையாட்டைப் பற்றி பேசுகையில், அதன் அழகைப் பற்றி நான் கூறியாக வேண்டும். லீக்-கில் ஆடும் ஒவ்வொரு அணியிலும் 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். அதில் 8 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களாக இருக்கிறார்கள். 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலரும் இந்திய தேசிய அணிக்காக ஆடியவர்களாக இருக்கிறார்கள். நான் கர்நாடக ரக்பி கூட்டமைப்பின் தலைவராக இருப்பதால், எங்களது மாநில அணியில் இருந்து சில வீரர்களை தேர்வு செய்து அணியில் இணைத்துள்ளோம். எங்களது அணியில் இருக்கும் 5 இந்திய வீரர்களில் இருவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான ரக்பி போட்டியில் அந்த மாநில அணிதான் கோப்பை வென்றது. அதனால், அந்த அணிக்காக ஆடி 2 சிறந்த வீரர்களை எங்களது அணியில் எடுத்துள்ளோம். இதேபோல், ரக்பி போட்டியில் சாம்பியன் மாநிலமாக திகழும் அரியானாவில் இருந்து 2 வீரர்களை தேர்வு செய்துள்ளோம். அத்துடன் மகாராஷ்டிரா அணிக்காக அதிக புள்ளிகளை எடுத்த வீரர் ஒருவரையும் நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம். இந்த இந்திய வீரர்கள் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள முன்னணி வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வார்கள். அதற்கு இத்தொடர் ஒரு சிறந்த சூழலை அமைக்கிறது. குறிப்பாக, அவர்களிடம் இருந்து ஆட்டத்தின் நுணுக்கம், தந்திரம் போன்றவைகளை அவர்கள் கற்கலாம். மேலும், அவர்களுடன் நல்ல தொடர்பை உருவாக்கவும், இணக்கமாக செயல்படவும் இத்தொடர் உதவுகிறது. எங்களது அணியில் இரண்டு அற்புதமான பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். தலைமை பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ ‘பாகோ’ ஹெர்னாண்டஸ் ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். இதேபோல், உதவிப் பயிற்சியாளர் இந்திய தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளராக இருக்கிறார். பயிற்சியாளர் ‘பாகோ’ ஸ்பெயின் நாட்டில் மிகவும் புகழ்பெற்றவர். அந்த நாட்டில் ரக்பி ஆட அவர்தான் காரணம். ஐரோப்பா நாடுகளில் கால்பந்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் சூழலில், ஸ்பெயின் வீரர்கள் ரக்பி பந்தை கையில் ஏந்த செய்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. ஐ.பி.எல் தொடரைப் போலவே, ரக்பி தொடருக்கும் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது,  2, 3 இந்திய வீரர்களை வசப்படுத்த நாங்கள் திட்டமிட்டோம். அதன்படி, சிலரை தேர்வு செய்தோம். குறிப்பாக இந்திய வீரர்களை வாங்க போட்டி போட்டோம். அது ஏன்னென்றால், இந்தியாவில் ரக்பி ஆடும் வீரர்களில் பெரும்பாலோனோர் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறார்கள். அவர்கள் மிகவும் வலுவானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு தங்களால் இயன்ற ஆதரவை கொடுக்கிறார்கள். இப்படியான சூழலில் இருந்து வரும் வீரர்களை வாங்க எல்லா அணி உரிமையாளர்களும் போட்டி போட்டனர். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஏலத்தில் வாங்கப்பட்டது பற்றி ஒரு வீரரிடம் நான் பேசுகையில், அந்த வீரர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இதற்காக அனைத்து அணி உரிமையாளர்களுக்கும், இந்திய ரக்பி கூட்டமைப்புக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். எளிய பின்னணியில் வந்துள்ள இந்திய வீரர்கள் இப்போது சர்வதேச தரத்திலான ஒரு லீக் போட்டியில் ஆடுகிறார்கள். மும்பைக்கு பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்தொடர் அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version