இந்தியா
தெஹ்ரானிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு
தெஹ்ரானிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை, ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடங்கி 5-வது நாள் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேலில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றன. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 224ஆக உயர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானுக்குள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு உள்ளே வந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஈரானின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் டெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் போர் விமானங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எந்தவித தடையும் இன்றி தாக்குதல் தொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் கூறியது.இந்த தாக்குதலில் ஈரானின் 120 ஏவுகணை லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம்தான் கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் எப்பி டெப்ரின் கூறியுள்ளார். மேலும் டெஹ்ரானில் உள்ள ஈரான் புரட்சிகர படையின் 10 கட்டளை மையங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு கூறுகையில், ‘டெஹ்ரான் வான்பகுதியை எங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய 2 குறிக்கோள்களை அடைவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம்’ என கூறினார். மேலும் அவர், ‘நாங்கள் வெற்றியின் பாதையில் இருக்கிறோம். அந்த இலக்கு எட்டப்படுகிறது. அற்புதமான பணிகளைச் செய்யும் எங்கள் வீர விமானிகள் மற்றும் எங்கள் அற்புதமான தரைப்படை குழுவினருக்கு நன்றி’ என்றும் தெரிவித்தார்இந்நிலையில் அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் , “நான் கையெழுத்திடச் சொன்ன ‘ஒப்பந்தத்தில்’ ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன். அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இஸ்லாமிய நாடு அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்றும் எச்சரித்தார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இருந்து முன்கூட்டியே வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்தார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலை தயாராக இருக்கவும், கட்டுபாட்டு அறையை கூட்டவும் டிரம்ப் கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்த விவாதங்கள் நடந்து வருவதாக ஜி 7 தலைவர்களிடம் டிரம்ப் கூறியதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.