இலங்கை
சொந்தக்காலில் நிற்பதற்கு முயற்சிசெய்யவேண்டும்; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
சொந்தக்காலில் நிற்பதற்கு முயற்சிசெய்யவேண்டும்; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
வெளிநாட்டு உதவிகளில் நாம் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது. வெளிநாட்டிலுள்ள அடுத்த தலைமுறைகள் சந்ததிகள் மாறும் போது இந்த உதவிகள் எதிர்காலத்தில் நின்று போகக்கூடும். எனவே நாம் எமது சொந்தக்காலில் நிற்கத் தயாராகவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இன்றைய எமது சமூகச்சூழல் மாற்றமடைந்து செல்கின்றது. பல குடும்பப் பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. எனவே அந்தப் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான சிறுவர் இல்லங்கள் அவசியமாகின்றன. பிள்ளைகளுக்கு வீடுகளே சிறந்த பாதுகாப்பு என்றபோதும், அந்த வாய்ப்புக் கிடைக்காத பிள்ளைகளுக்கு இல்லங்களே அரணாக அமைகின்றன. இன்று மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றமையால் பல பாடசாலைகள் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து மூடப்பட்டுவருகின்றன. ஆனால் இங்கு 200 இற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கின்றார்கள். இதுவும் ஒரு பாடசாலைதான்.
இதேவேளை, வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர், சிறுவர் இல்லச் சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சிக் கற்கைநெறிகளை – என்.வி.க்யூ. சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கவிருக்ககின்றார். இதன்மூலம் சிறுவர் இல்லத்திலிருந்து சிறுவர்கள் சமூகத்துக்குச் செல்லும் போது அவர்கள் தமது சொந்தக்காலில் நிற்கமுடியும் – என்றார்.