இலங்கை
கதிர்காமம் காட்டு வழிப்பாதை நாளை திறப்பு!
கதிர்காமம் காட்டு வழிப்பாதை நாளை திறப்பு!
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு காட்டு வழிப்பாதை நாளை அதிகாலை 5.30 மணியளவில் திறக்கப்படவுள்ளது.
காட்டுப் பாதை திறப்பதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே இருக்கையில் அப்பாதை, பயணிப்பதற்கு உகந்ததாக காட்சியளிக்கிறது என அங்கு நேரடியாக சென்றுவந்த சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொண்டு நிறுவனங்களும் அப் பாதையின் சீரான நிலை பற்றி அறிவித்துள்ளது. கதிர்காமப் பாதயாத்திரீகர்கள் தங்கும் முதலாவது இடைத்தங்கல் பிரதேசமான வாகூர வெட்டை, கிணற்றடி பகுதியில், கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாகவும், கிழக்கு , ஊவா மாகாண எல்லையில் உள்ள குமுக்கன் ஆற்றின் ஓட்டமும் கடந்த வாரங்களில் கணிசமாக அதிகரித்து காணப்பட்டதாயினும் தற்போது முகத்துவாரம் ஊடாக நீர் வழிந்து ஓடுவதாகவும் சில நாட்களில் நீர் ஓட்டமும் மேலும் குறையக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், காலை, இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் காட்டுவழிகளில் நடமாடுவதைக் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டுமென்றும் தொண்டர் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.