நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 19/06/2025 | Edited on 19/06/2025
உலகளவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். குறிப்பாக பல ரிஸ்க் ஸ்டண்ட் காட்சிகளில் டூப்பே போடாமல் நடித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த மே மாதம் ‘மிஷன்: இம்பாசிபிள் 8’ படம் வெளியானது. அதிலும் அவரது வழக்கமான ரிஸ்க் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதாவது 8000 அடி உயரம் வரை ஏரோபிளேனில் டூப் போடாமல் அவர் பறந்திருந்தார். இது வழக்கம் போல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி குழு அறிவித்துள்ளது. இவரைத் தவிர்த்து ஹாலிவுட் நடிகை டெபி ஆலன், தயாரிப்பு வடிவமைப்பாளர் வின் தாமஸ் மற்றும் பாடகி டோலி பார்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் இவர்கள் ஆற்றிய அளப்பறிய அர்ப்பணிப்பிற்காக அதை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அகாடமி குழு தலைவர் ஜேனட் யாங் தெரிவித்துள்ளார்.
இந்த கௌரவ ஆஸ்கர் விருதை கவர்னர்ஸ் விருதுகள் என்றும் அழைக்கிறார்கள். இந்தாண்டு 16வது கவர்னர்ஸ் விருதுகள் நடைபெறுகிறது. விருது வழங்கு விழா வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள ரே டால்பி பால்ரூமி அரங்கத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி விருது வாங்கும் பிரபலங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் டாம் க்ரூஸ் இதுவரை நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷ் ஆகி பின்பு விருதுக்கு தேர்வாகாமல் இருந்துள்ளார். பின்பு அவர் திரைத்துறைக்கு வந்து 35 ஆண்டுகள் கடந்து இப்போது கௌரவ ஆஸ்கர் விருது வாங்கவுள்ளார்.