இலங்கை
தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
தெல்லிப்பழைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக சீரமைத்துத்தருமாறு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகாரிகள்,
தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜே/213 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள செல்லத்துரை வீதியில் சமிக்ஞை விளக்கு மாத்திரம் காணப்படுகின்றது. சுமார் 500 முதல் 550 பயணிகள் வரை இந்த வீதியைப் பயன்படுத்துகிறார்கள். ஜே/227 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கோயில்குளம் வீதியில் 1000 முதல் 1500 பயணிகள் வரை வீதியைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் புகையிரதக்கடவைக்கு சமிக்ஞையும் பாதுகாப்புக் கடவையும் இல்லை. ஜே /234 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சந்தை வீதியில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்குரிய பாதுகாப்புக்கடவை சமிக்ஞை இல்லை. ஜே / 235 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள குரு வீதியில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்குரித்தான ரயில் கடவையை 200 முதல் 225 வரையான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதில் சமிக்ஞை விளக்குள்ள பொழுதிலும் பாதுகாப்புக்கடவை இல்லை. ஜே/236 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாவிட்டபுரம் மயிலிட்டி வீதியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்குரிய ரயில் கடவையை 500 முதல் 600 வரையான பயணிகள் பயன்படுத்தும் நிலையில் சமிக்ஞை விளக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் பாதுகாப்புக்கடவை காணப்படவில்லை. ஜே/237 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பொன்னு சீமா வீதியிலுள்ள ரயில் கடவை 100 முதல் 125 பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். சமிக்ஞை விளக்குள்ள பொழுதிலும் பாதுகாப்புக் கடவை இல்லை.
இதுவரை இந்தக் கடவைகளில் 4 விபத்துகள் பதிவு செய்யப்பட் டுள்ளதுடன் ஓர் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவை குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.