இலங்கை
நீதியமைச்சர் இதுவரை தூக்கத்திலா இருந்தார்… புதைகுழி விவகாரத்தில் சாடுகிறார் கயந்த
நீதியமைச்சர் இதுவரை தூக்கத்திலா இருந்தார்… புதைகுழி விவகாரத்தில் சாடுகிறார் கயந்த
வடக்கில் பல மனிதப் புதைகுழிகள் உள்ளன என்பது வதந்தி என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். நீதி அமைச்சர் இத்தனை காலமும் தூக்கத்திலா இருந்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக.
மண்டைதீவு மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயார் இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
போர்க்காலத்திலும் சரி, போர் நிறைவுக்கு வந்த பின்னரும் வடக்கில் பல மனிதப்புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுத் தோண்டப்பட்டன. தற்போது யாழ்ப்பாணத்திலும் ஒரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தோண்டப்படுகின்றது.
போர் நடைபெற்ற காலத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணிப் புதைகுழி தவிர வேறு எந்தப் புதைகுழி தொடர்பிலும் வடக்கு மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்தப் பின்னணியில் வடக்கில் பல மனிதப் புதைகுழிகள் என்பது வதந்தி என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். நீதி அமைச்சர் என்ற பதவி நிலையை மறந்து அவர் பொறுப்பற்ற விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – என்றார்.