இலங்கை
மடுமாதா ஆலயத் திருவிழா சகல ஏற்பாடுகளும் நிறைவு!
மடுமாதா ஆலயத் திருவிழா சகல ஏற்பாடுகளும் நிறைவு!
400 பொலிஸார் கடமையில்; மன்னார் மாவட்டச்செயலர் தகவல்
மன்னார் மருதமடுத் திருப்பதியின் ஆடி மாதத் திருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மருதமடு திருப்பதியின் ஆடி மாத திருவிழாவையொட்டி முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் மன்னார்மறை மாவட்டக் குருமுதல்வர் அருட் தந்தை கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார். மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பிசோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத்தலைவர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படை உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
இதில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சுகாதாரம், குடிதண்ணீர், போக்குவரத்து, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதன்போது நாட் டின் பலபாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் வருகைதர உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 400 பொலிஸாரை பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மருதமடுத்திருப்பதியின் ஆடிமாதத் திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 2ஆம் திகதி திருவிழாத் திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.