இந்தியா
மதில் சுவர் அமைக்க சரிக்கப்பட்ட தென்னை, மா… மரத்தை வெட்டியவர்கள் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு; புதுச்சேரியில் சுவாரசியம்
மதில் சுவர் அமைக்க சரிக்கப்பட்ட தென்னை, மா… மரத்தை வெட்டியவர்கள் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு; புதுச்சேரியில் சுவாரசியம்
புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் இருந்த தென்னைமரம் மற்றும் மாமரத்தை உரிமையாளரிடம் அனுமதி கேட்காமல் வெட்டப்பட்டுள்ளது. மரங்கள் இருந்த வீட்டின் பின் வீட்டில் குடியிருந்த செல்வகுமார் என்பவர் மதில் சுவர் அமைக்க வேண்டி நான்கு பேரைக் இதனைச் செய்துள்ளார். தென்னை மரம் வெட்டப்பட்டதை அடுத்து, மரத்தின் உரிமையாளர் வெட்டியவரிடம் கேட்டபோது, தவறுதலாக வெட்டிவிட்டதாக கூறியுள்ளார். மரம் வெட்டப்பட்டது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய மரத்தின் உரிமையாளர், அதனை வீடியோ எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது, உரிமையாளரிடம் மரத்தை வெட்டிய நபர்கள் தாங்கள் தவறு செய்து விட்டதாகவும், தங்களை மன்னித்துக் கொள்ளவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் தொலைபேசியில் கெஞ்சியுள்ளனர். இதையடுத்து, மரத்தின் உரிமையாளர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்றும், அவர்கள் வெட்டிய அந்த மரத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், அவர்கள் மன்னிப்பு கேட்பதை வீடியோ எடுத்து தனக்கு அனுப்பும்படியும் கூறியிருக்கிறார். உடனடியாக மரம் வெட்டிய நபர்கள் வெட்டப்பட்ட தென்னை மரத்தின் முன்பு நின்று தாங்கள் செய்தது தவறு, மன்னித்துவிடு என்று தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்டு, அதனை வீடியோ எடுத்து உரிமையாளருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர். இதனை ஏற்ற மரத்தின் உரிமையாளர், போலீசில் புகார் அளிப்பதை நிறுத்தி கைவிட்டுள்ளார். காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் வெட்டிய தென்னை மரத்திடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் சுவாரசியமாக பேசப்பட்டு வருகிறது. செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.