வணிகம்
இ.பி.எஃப்.ஓ வழங்கும் காப்பீட்டு திட்டம்; அதிகபட்ச தொகை ரூ. 7 லட்சம்: இ.டி.எல்.ஐ-யின் முழு விவரம் இதோ
இ.பி.எஃப்.ஓ வழங்கும் காப்பீட்டு திட்டம்; அதிகபட்ச தொகை ரூ. 7 லட்சம்: இ.டி.எல்.ஐ-யின் முழு விவரம் இதோ
ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (Employees’ Deposit Linked Insurance – EDLI) குறித்து பாஸ்வாலா யூடியூப் சேனலில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.இது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (Employee Provident Fund Organization – EPFO) வழங்கப்படும் ஒரு காப்பீட்டு நன்மை ஆகும். இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், இது நிதி பாதுகாப்பு அமைப்பாகும். பி.எஃப் கணக்கில் பங்களித்து வந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வழங்கப்படுவதையே இது குறிக்கிறது.தற்போதைய நிலவரப்படி, இதில் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ. 7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற சில தகுதி அளவுகோல்கள் உள்ளன. அந்த வகையில், ஒரு ஊழியர் தனது பி.எஃப் கணக்கில் குறைந்தபட்சம் 12 மாதங்கள் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். மேலும், ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் போது, அந்நபர் உயிரிழந்தால் மட்டுமே அவர்களின் குடும்பத்தினர் இந்தக் காப்பீட்டு பணத்தைக் கோர முடியும்.இதன் நஷ்ட ஈடு கணக்கீடு தொடர்பாக சில தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். குறிப்பாக, இந்த தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று அறிந்து கொள்வது அவசியம். அதன்படி, சராசரி மாத சம்பளத்தை 35-ஆல் பெருக்கி, அதனுடன் ரூ. 2.5 லட்சம் போனஸ் சேர்க்கப்பட்டு நஷ்டஈடு தொகை கணக்கிடப்படுகிறது. இதன் அதிகபட்ச தொகை ரூ. 7 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச தொகையாக ரூ. 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நஷ்ட ஈடு தொகையை கோருவதற்கு சில ஆவணங்கள் தேவைப்படும். அதன்படி, படிவம் 51 F, இறப்புச் சான்றிதழ், வங்கியின் பாஸ்புக் நகல், ஆதார், பான் அட்டை விவரங்கள் மற்றும் பணியின் விவரங்கள் அடங்கிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.