இலங்கை

இன்று வருகிறார் வோல்கர் டேர்க்! 9 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வரும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர்

Published

on

இன்று வருகிறார் வோல்கர் டேர்க்! 9 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வரும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ளார். அவரது வருகையை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி வரை வோல்கர் டேர்க் இலங்கையில் தங்கவுள்ளார். அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய தரப்புகளுடனும் வோல்கர் டேர்க் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

Advertisement

கண்டிக்குச் செல்லவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் புனித தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவார். அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமைப் பீடாதிபதிகளையும் சந்திப்பார். யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் வரவுள்ள ஆணையாளர், மாகாண ஆளுநர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் வடக்கு வரும்போது சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பம் இதுவாகும். 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித்ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு வந்திருந்தார். வோல்கர் டேர்க்குக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளராகப் பணியாற்றிய மிச்செல்பச் செலெட் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்திருந்த போதும் அது சாத்தியமாகவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்க்கால உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக் கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளபோதும், இலங்கை அதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றது. இந்த நிலையில் தற்போதைய ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் இலங்கை வருகை அதிக அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது.

Advertisement

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாகத் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இனமோதலுக்கான அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வைக் காணவேண்டும் என வோல்கர் டேர்க் வலியுறுத்தியிருந்தார்.

பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version