இலங்கை
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்
தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் மாதாந்த சம்பளம் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் திகதி வழங்கப்பட்டாலும், ஜூன் மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளம் கடந்த மாதமும் தாமதமானது, இதற்கான காரணம் ஆராயப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
“20 ஆம் திகதி சம்பளம் வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆசிரியர்களின் சம்பளம் வலயக் கல்விக் காரியாலயங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
தேவையான அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கவில்லை. எல்லோரும் தங்கள் சம்பளத்திற்காக காத்திருக்கிறார்கள். இது ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.