இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் அரசாங்கம்; மொட்டுக் கட்சி வலியுறுத்து
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் அரசாங்கம்; மொட்டுக் கட்சி வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக் காட்டினார். மொட்டுக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இந்தவிடயத்தை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளைப் பிடிப்போம் என கத்தோலிக்க மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். பிரதான சூத்திரதாரி தமது கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்ததையே அவர் மறைத்தார். அதே போல பேராயரையும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தவறாக வழிநடத்தினார்கள். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் இது தொடர்பில் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம். பேராயரும் இந்த விடயத்தில் தலையிட்டு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். ஏனெனில் பிரதான சூத்திரதாரிகள் மறைக்கப்படுகின்றனரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது – என்றார்.