இந்தியா
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம் ; மத்திய அரசின் ஊடகத் தகவல் சரிபார்ப்புப் பிரிவு
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம் ; மத்திய அரசின் ஊடகத் தகவல் சரிபார்ப்புப் பிரிவு
ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் அது விபத்தில் சிக்க முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணை தெரிவிப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையல்ல எனத் தெரியவந்துள்ள நிலையில் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என இந்திய அரசு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த தினத்தன்று விமானம் மேலெழுந்து பறக்கத் தொடங்கியபோது, விமானியின் இருக்கை திடீரென பின்னோக்கி வேகமாக நகர்ந்து சென்றதாகவும் இதனால் அவரால் கட்டுப்பாட்டுக் கருவியை கையாள முடியவில்லை என்றும் உறுதி செய்யப்படாத அந்த ‘வாட்ஸ் அப்’ தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டுப்பாட்டுக் கருவியையும் விமானி பின்னோக்கி இழுத்துவிட்டதால் விமானம் சட்டென நடுவானில் ஒரே இடத்தில் நிலைக்குத்தி நின்றதாகவும் அதன் இன்ஜினின் வேகம் குறைந்துவிட்டதாகவும் சமூக ஊடகத் தகவல் தெரிவித்தது.
இதையடுத்து, துணை விமானி விமானம் பறப்பதைக் கட்டுப்படுத்தும் கருவியை, தாம் கையாள முயன்று, அதுவும் தோல்வி கண்டதால் சில நொடிகளில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இக்கூற்று தவறானது என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசின் ஊடகத் தகவல் சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டி சேதமடைந்த நிலையில், அதிலிருக்கும் தரவுகளை எடுக்க, அது அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.