நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 24/06/2025 | Edited on 24/06/2025
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரானில் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகவும் குற்றம்சாட்டி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே அமெரிக்கா, ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி தளவாடங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தார் தலைநகர் டோகாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் ஏவுகணை மூலம் தாக்கல் நடத்தியுள்ளது. ஏற்கெனவே கத்தார், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் போன்ற நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமான மூடியுள்ள நிலையில் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில். 19 ஏவுகணைகளை இடைமறித்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக கத்தார் அரசு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் மேற்கு ஆசியா பகுதியில் உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் – ஈரான் ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது குறித்து டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது, “அனைவருக்கும் வாழ்த்துக்கள். சுமார் 6 மணி நேரத்தில் இஸ்ரேலும் ஈரானும் தங்கள் முன்னேற்றத்தில் உள்ள இறுதிப் பணிகளை முடித்துவிட்ட பிறகு, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 12 நாட்களாக நடந்த போரின் அதிகாரப்பூர்வமாக முடிவை உலகமே வரவேற்கும். போர் நிறுத்தத்தின் போது, ஒரு பக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ‘12 நாள் போர்’ என்று அழைக்கப்பட வேண்டிய போர் முடிவுக்கு கொண்டு வந்து புத்திசாலித்தனமான நடந்து கொண்ட இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இது பல ஆண்டுகளாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது தற்போது நடக்கவில்லை, ஒரு போதும் நடக்காது. கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்று ஈரான் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்ததாவது, “போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார். வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை. போரை மேற்கத்திய நாடுகளே தொடங்கின. அதனால், போரை நிறுத்துவது பற்றி ஈரானே முடிவு செய்யும். இஸ்ரேல் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தினால், நாங்கள் போரை தொடரமாட்டோம்” என்று தெரிவித்தார்.
ரஷ்யா – உக்ரைன் போர், இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல், இஸ்ரேல் – ஈரான் போர் உள்ளிட்ட மோதல் தொடர்பாக மத்தியஸ்தம் செய்து உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னும், போர் இன்னும் முடியவில்லை என்று ஈரான் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் டொனால்ட் டிரம்ப்பின் மதிப்பு உலக நாடுகளில் சற்று குறைந்ததாகக் கூறப்பட்டது. போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் ஊடகமும் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 12 நாட்களக நடைபெற்று வந்த தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.
- “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
- “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்