இலங்கை
யாழில் உணவகம் சீல் வைப்பு!
யாழில் உணவகம் சீல் வைப்பு!
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் உணவகங்கள், பலசரக்கு கடைகள் கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த 05ஆம் திகதி திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் பலசரக்கு கடை பரிசோதிக்கப்பட்டது. திகதி காலாவதியான பொருட்கள், சுட்டுத்துண்டு இன்றிய பொருட்கள் என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதேசமயம் கடந்த 21.ஆம் திகதி திருநெல்வேலி பொதுசுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் திருநெல்வேலியில் உணவகம் ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏற்கனவே பல தடவைகள் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும், சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை கவனத்திற்கொள்ளாமல், குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது சுகாதார பரிசோதகரால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பலசரக்கு கடை, உணவக உரிமையாளர்களிற்கு எதிராக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகளை நேற்றையதினமே விசாரணைக்கு எடுத்துகொண்ட நீதிவான் செ. லெனின்குமார் பலசரக்கு கடை உரிமையாளரிற்கு ரூ. 100,000 தண்டம் விதித்ததுடன், உணவக உரிமையாளரிற்கு ரூ.90,000 தண்டம் விதித்து உணவகத்தை சீர் செய்யும் வரை சீல் வைத்து மூடுமாறும் சுகாதார பரிசோதகரிற்கு கட்டளையிட்டார். இதனையடுத்து குறித்த உணவகம் சீல் வைத்து மூடப்பட்டது.