பொழுதுபோக்கு
அப்போ சாக்லேட் பாய்… இப்போ கொக்கைன் வழக்கில் கைது: நடிகர் ஶ்ரீகாந்த் கடந்து வந்த பாதை!
அப்போ சாக்லேட் பாய்… இப்போ கொக்கைன் வழக்கில் கைது: நடிகர் ஶ்ரீகாந்த் கடந்து வந்த பாதை!
ஏறத்தாழ 2000-களின் முற்பகுதியில் தான் தமிழ் சினிமாவிற்குள் ஸ்ரீகாந்த் நுழைந்தார். சினிமா பயணத்தை தொடங்கிய உடனேயே அப்போதைய டாப் ஹீரோக்களுக்கு சவால் விடும் அளவிற்கு ஸ்ரீகாந்தின் வளர்ச்சி இருந்தது. இயக்குநர் சசியின் ‘ரோஜாக்கூட்டம்’ திரைப்படம், ஸ்ரீகாந்தை ஒரு கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தது. ஆனால், அதற்கு முன்பாக ஸ்ரீகாந்த் சந்தித்த சவால்கள் பலருக்கும் தெரியாது.ஸ்ரீகாந்தின் பயணம் சின்னத்திரையில் தொடங்கியது. இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘ஜன்னல் – மரபுக் கவிதைகள்’ என்ற சீரியல் மூலமாகவே கலை உலகில் ஸ்ரீகாந்த் நுழைந்தார். அதன் பின்னர், மாடலிங் துறையிலும் பணியாற்றியுள்ளார். முன்னதாக, இயக்குநர் கதிரின் ‘காதல் வைரஸ்’ மற்றும் ஜீவாவின் ’12 B’ ஆகிய படங்களில் ஸ்ரீகாந்த் நடிப்பதாக இருந்தது. எனினும், அந்த வாய்ப்புகள் கை நழுவிச் சென்றன.இத்தகைய சூழலில் இயக்குனர் சசியின் ‘ரோஜாக்கூட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு ஸ்ரீகாந்துக்கு கிடைத்தது. இத்தனை ஆண்டுகள் காத்திருப்பு கிடைத்த பலனாக, இப்படம் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த வாய்ப்புகள் ஸ்ரீகாந்திற்கு குவியத் தொடங்கின. இதன் பின்னர், ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட படங்களில் சினேகாவுடன் ஸ்ரீகாந்த் நடித்தார். இப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் கால் பதிக்கும் அளவிற்கு ஸ்ரீகாந்தின் வளர்ச்சி அமைந்தது. ‘ஓகாரிகி ஒக்காரு’ என்ற படத்தின் மூலமாக தெலுங்கிலும் ஸ்ரீகாந்த் அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. எனினும், தெலுங்கி ஏற்கனவே ஸ்ரீகாந்த என்ற நடிகர் இருந்ததால், அங்கு ஸ்ரீராம் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.இவ்வாறு அடுத்தடுத்த வெற்றிகளை கண்ட ஸ்ரீகாந்தின் பயணம் ஒரு கட்டத்தில் சரிவை சந்திக்க தொடங்கியது. சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஸ்ரீகாந்த் தவற விட்டதும், இதற்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக, ‘ஆயுத எழுத்து’, ‘ரன்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘பிச்சைக்காரன்’ போன்ற பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஸ்ரீகாந்த் தவறவிட்டார். இதில் இருந்து அவரது திரைப்பயணம் பெரும் சறுக்கலை சந்தித்தது. அதன்பின்னர், ‘நண்பன்’ திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.இதனிடையே, ஒரு பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்ய மறுத்ததாக ஸ்ரீகாந்த் மீது சம்பந்தப்பட்ட பெண் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தார். அதன் பின்னர், அதே பெண்ணை ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவை அனைத்துமே அவரது சினிமா வாழ்க்கையையும் பாதித்ததாக தெரிகிறது. இப்படி ஒரு சூழலில் தான் தற்போது போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.