வணிகம்
குறைவான சிபில் ஸ்கோர்… வேலை மறுத்த எஸ்.பி.ஐ வங்கி: அதிரடி காட்டிய ஐகோர்ட்
குறைவான சிபில் ஸ்கோர்… வேலை மறுத்த எஸ்.பி.ஐ வங்கி: அதிரடி காட்டிய ஐகோர்ட்
சிபில் ஸ்கோர் குறைவாக இருந்த காரணத்தினால், ஒரு நபரின் பணி நியமனத்தை ரத்து செய்த எஸ்.பி.ஐ வங்கியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதன்படி, இந்த விவகாரத்தில் வங்கியின் முடிவு சரியானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.எஸ்.பி.ஐ வங்கியின் சர்க்கிள் பேஸ்டு ஆஃபிசர் (CBO) பதவிக்கு ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது சிபில் அறிக்கை கிடைத்த பிறகு, கடன் தவணைகளை சரியாக செலுத்தாத தன்மை இவருக்கு இருப்பதை கண்டறிந்த எஸ்.பி.ஐ, இவரது நியமனத்தை ரத்து செய்தது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி என். மாலா தள்ளுபடி செய்தார்.”பொதுமக்களின் பணத்தை கையாளும் வங்கி ஊழியர்கள் நிதி ஒழுக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நிதி ஒழுக்கம் இல்லாத ஒருவரை நம்பி பொதுமக்களின் பணத்தை ஒப்படைக்க முடியாது” என்று நீதிபதி என். மாலா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ஆட்சேர்ப்பு அறிவிப்பின் 1(E) பிரிவில், கடன் தவணைகள் தவறியவர்கள் மற்றும் சிபில் அல்லது பிற வெளிப்புற நிறுவனங்களிடமிருந்து எதிர்மறையான அறிக்கைகள் உள்ளவர்கள் நியமனத்திற்கு தகுதியற்றவர்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த விதிமுறை இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட நபர் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பணிக்கு விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலிலும் பங்கேற்றார். அவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர்தான், அவருக்கு எதிராக உள்ள சிபில் அறிக்கையை வங்கி அறிந்துகொண்டது.அந்த அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட நபர் 2018-ஆம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் துணை மேலாளராகப் பணிபுரிந்தபோது ரூ. 90,000 முதல் ரூ. 1.5 லட்சம் வரையிலான மூன்று தனிநபர் கடன்களைப் பெற்றார், ஆனால், அவற்றை தவணை தவறாமல் திருப்பிச் செலுத்தவில்லை. மேலும், அவர் கிரெடிட் கார்டு தவணைகளையும் தவறவிட்டதால், 2019-ஆம் ஆண்டில் ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு ரூ. 40,000 இழப்பு ஏற்பட்டது.இந்த விவரங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட நபர், வேலைக்கு விண்ணப்பிக்கும்போது மறைத்துவிட்டதாக எஸ்.பி.ஐ வங்கி வழக்கறிஞர் மோகன் குற்றம் சாட்டினார். ஆனால், வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் அனைத்து நிலுவைகளையும் மனுதாரர் செலுத்திவிட்டதாகவும், எனவே ஆட்சேர்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த நிபந்தனை வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் நிலுவைகளை செலுத்துவது பற்றியது அல்ல என்றும், ஆனால் குறித்த நேரத்தில் கடன்களை திருப்பி செலுத்தும் ஒரு நல்ல தன்மையை கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றியது என்றும் தெரிவித்தார். மோசமான கடன் வரலாறு உள்ளவர்களை நியமிக்காத எஸ்.பி.ஐ-யின் முடிவு சரியானது என்று நீதிபதி கூறினார்.