இலங்கை
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை முன்னேறவேண்டும்;
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை முன்னேறவேண்டும்;
யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்திடம் ஐ.நா.ஆணையாளர் தெரிவிப்பு
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கு முனைப்புக்காட்ட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ட்ரக் தெரிவித்தாரென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தயாபரன் லஜிதர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்து உரையாடியபின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை சார்ந்த சான்றாதாரங்களை ஐக்கிய நாடுகள் அவைக்குப் பாரப்படுத்த வேண்டும். இனப்படுகொலை சார்ந்த விடயங்களை அவர்கள் தொடர்ந்து கண்காணித்துக்கொள்ள வேண்டும். போர் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்தபொழுதிலும் ஒரு தேசிய இனமாக நாங்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுகின்றோம். தற்பொழுதுள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நில அபகரிப்புகள், சிங்கள – பெளத்தமயமாக்கல், திட்டமிட்ட கைதுகள் என்பன அரங்கேறுகின்றன. இனப்படுகொலைக்கு நீதிகோரி இலங்கையை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று அவரிடம் எடுத்துரைத்தோம். இதன் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ட்ரக். இலங்கை பொறுப்புக்கூறலில் முன்னேறவேண்டும். அதற்கு முனைப்புக் காட்டவேண்டும் என்று குறிப்பிட்டார் -என்றார்.