இலங்கை
மீன்பிடி படகுகள் விபத்து தொடர்பான சம்பவங்களை ஆராய விசேட குழு
மீன்பிடி படகுகள் விபத்து தொடர்பான சம்பவங்களை ஆராய விசேட குழு
மீன்பிடி படகு விபத்துக்கள் தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களை ஆராய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து அவதானம் செலுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (29) மற்றும் நேற்று (28) இடம்பெற்ற மூன்று மீன்பிடி படகு விபத்துகளில் ஐந்து மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவரை காணவில்லை.
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்று பாறையில் மோதி விபத்துக்குள்ளானதோடு, அதில் இருந்த நான்கு மீனவர்கள் டிங்கி படகின் உதவியுடன் தப்பியுள்ளனர்.
இருப்பினும், இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் உடல் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
பேருவளை, மொரகல்ல பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி படகில் இருந்த இரண்டு மீனவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், அவர்களின் சடலங்கள் இன்று காலை பெந்தர கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அளுத்கம களுவாமோதர பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஆவர்.
தெவிநுவர பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற “தினேஷ் – 4” என்ற பல நாள் மீன்பிடி படகு வணிகக் கப்பலுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன மீனவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கடற்படை தெரிவித்துள்ளது.
மீன்பிடிக் கப்பல் ஒரு வணிகக் கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது, மேலும் அதில் இருந்த 6 மீனவர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
நேற்று இரண்டு மீனவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், காணாமல் போன ஏனைய மீனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் மோதி கவிழ்ந்த படகில் பல மணி நேரம் சிக்கிக் கொண்ட மீனவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு, தற்போது காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.