இலங்கை
கல்லுண்டாய்ப் பகுதிக்குள் திண்மக்கழிவைக் கொட்டாதே!
கல்லுண்டாய்ப் பகுதிக்குள் திண்மக்கழிவைக் கொட்டாதே!
மாநகரசபை வாகனங்களை வழிமறித்து நேற்றுப் போராட்டம்
யாழ்ப்பாணம் மாநகரசபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லுண்டாய்ப் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேசசபையின் உறுப்பினர்களும் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாநகரசபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவக்கழிவு, மலக்கழிவு, பிளாஸ்ரிக்கழிவு, விலங்குக்கழிவு உட்பட பல கழிவுகளை மானிப்பாய் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கல்லுண்டாய்ப் பகுதிக்குள் கொட் டப்படுவதை நிறுத்தும்படி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.
இதன்போது மாநகரசபைக் கழிவுகளை ஏற்றிவந்த உழவியந்திரங்கள் பல வழிமறிக்கப்பட்டன. மலக்கழிவை ஏற்றிவந்த மாநகரசபையின் வாகனம் ஒன்று திருப்பியனுப்பப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் மாநகரசபையின் உறுப்பினர் மயூரனுக்கும், கல்லுண்டாய்பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேசசபையின் உறுப்பினர்களான உஷாந்தன், வாசன் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் களத்தில் பொலிஸார் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட் டது. இதேவேளை கல்லுண்டாய் வெளிக்குப்பைமேட்டில் நேற்றுமுன்தினம் இரவு பெரும் தீ ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வந்த பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் சகிதம் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
இந்தத் தீ நேற்றுவரை எரிந்து கொண்டு இருந்ததுடன் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கும் அண்டிய சூழலில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.