இலங்கை
புதைகுழி ஆய்வுகளுக்காக இலங்கையில் ஆய்வகம்; ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
புதைகுழி ஆய்வுகளுக்காக இலங்கையில் ஆய்வகம்; ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
செம்மணிப் புதைகுழி உட்பட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கையில் ஆய்வகமொன்றை அமைப்பதற்கு உதவவேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளோம். இவ்வாறு சபை முதல்வரும். அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- வடக்கில் செம்மணி, மண்டைத்தீவு, கொக்குதொடுவாய், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வடக்கிலும், தெற்கிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான புதைகுழிகள் இருக்கக் கூடும். இவை தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. மனிதப்புதை குழிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை நாம் சந்தித்தோம். மனித எலும்புக்கூடுகளை அடையாளம் கண்டு, ஆய்வுக்காக உரிய வசதிகளுள்ள வெளிநாடொன்றுக்கு அவற்றை அனுப்ப வேண்டும். இதற்கு காலமெடுக்கும். மாத்தளை மனிதப் புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை அனுப்பும் போது, எலும்புக்கூடுகள் மாற்றப்பட்டுள்ளன என்ற பலத்த சந்தேகம் எமக்குள்ளது.
எமக்கு ஆய்வு செய்யக்கூடிய ஆய்வக மொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு உதவவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நிச்சயம் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும். எமது தோழர்களும் காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர். எனவே புதைகுழிகளுடன் நாம் விளையாடமாட்டோம். அந்த வலி, வேதனை எமக்கு நன்கு புரியும். நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நீதி நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படும். செம்மணி அகழ்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – என்றார்.