இலங்கை
வரதட்சணை கொடுமை; புதுமணப்பெண் தற்கொலையால் அதிர்ச்சி!
வரதட்சணை கொடுமை; புதுமணப்பெண் தற்கொலையால் அதிர்ச்சி!
வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில்,
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், ரிதன்யா சடலமாக காணப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வட்ஸ்அப் மூலம் சில குரல்பதிவுகளை அனுப்பி உள்ளார். அதனை பொலிஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த குரல்பதிவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.