இலங்கை
சமூக ஊடகங்களில் இடம்பெறும் பாரிய மோசடி குறித்து வெளியான எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் இடம்பெறும் பாரிய மோசடி குறித்து வெளியான எச்சரிக்கை
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் வேலை செய்து வந்த ஒருவரால், அங்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, இந்த மோசடி இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
டுபாயில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களிடம் இருந்து வீடியோக்களை பெற்று, அவற்றை தமக்கு தேவையான விதத்தில் திருத்தி, யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டதன் மூலம் அவர் இந்த மோசடியைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் சிக்கியவர்கள் பணியகத்திற்கு வழங்கிய முறைப்பாடுகளை அடுத்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவு, மக்களை ஏமாற்றி நடத்தப்படும் இந்த மோசடி குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முறைபாடுகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மட்டுமே வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக தனிநபர்களிடமிருந்து பணம் பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இத்தகைய பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், இதுபோன்ற நபர்கள் தொடர்பான தகவல்களை பணியகத்திற்கு தெரிவிக்குமாறும் பணியகம் கேட்டுக்கொள்கிறது.
இது குறித்த முறைப்பாடுகளை 1989 என்ற எண்ணுக்கோ அல்லது சிறப்புப் விசாரணை பிரிவின் 0112864123 என்ற எண்ணுக்கோ தெரிவிக்கலாம்.