பொழுதுபோக்கு
60 ஆண்டு பழமை; எங்கு திரும்பினாலும் இந்த போட்டோ உங்களை பார்க்கும்: கே.ஆர். விஜயா ஹோம் டூர்!
60 ஆண்டு பழமை; எங்கு திரும்பினாலும் இந்த போட்டோ உங்களை பார்க்கும்: கே.ஆர். விஜயா ஹோம் டூர்!
தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான கே.ஆர். விஜயா, தனது 60 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில் பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளார். இத்தனை ஆண்டுகளில் அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில், தனது திரையுலக பயணத்தின் தொடக்கம் குறித்து இந்தியா க்ளிட்ஸ் யூடியூப் சேனலுடனான நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நேர்காணல் ஒரு ஹோம் டூராக அமைந்தது என்பது கூடுதல் சிறப்பு.தனது திரையுலக பயணத்தை கே.ஆர். விஜயா குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்க்கும் போது, கே.ஆர். விஜயா ஒரு நடிகையாக வேண்டும் என்று ஒருபோதும் கனவு கண்டதில்லை. இது அவரது பெற்றோரின் கனவாகவே இருந்தது. 11 வயது வரை கேரளாவில் வளர்ந்த அவருக்கு, சினிமா பற்றிய எந்த புரிதலும் இல்லை. அவரது தந்தை ராணுவத்தில் இருந்தவர். மேலும், நாடகத் துறையில் ஆர்வம் கொண்டவர். நடிகர் நாகையாவுடன் அவருக்கு பழக்கம் இருந்ததாகவும், கே.ஆர். விஜயா நினைவு கூர்ந்தார்.இதையடுத்து, சென்னைக்கு வந்த பிறகு நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதே அவரது திரையுலக பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. இவ்வாறு சினிமா உலகில் தனது வருகை குறித்து கே.ஆர். விஜயா தெரிவித்துள்ளார். இவை தவிர தனது வீட்டில் இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் குறித்து கே.ஆர். விஜயா பகிர்ந்து கொண்டார். இவற்றில், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து கே.ஆர். விஜயாவிற்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனை கே.ஆர். விஜயா, தனது வீட்டில் ஃப்ரேம் போட்டு அலங்கரித்துள்ளார்.இவை மட்டுமின்றி, ‘இதய கமலம்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தன்னுடைய 60 ஆண்டுகள் பழமையான புகைப்படத்தை இப்போதும் கே.ஆர். விஜயா பத்திரமாக வைத்துள்ளார். தீபாவளி அன்று தனது மூன்று சகோதரிகளுடன் எடுத்த ஒரு படம், தோட்டத்தில் தனது பேரக்குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இதில் நிறைந்துள்ளன.எனினும், இந்த வரிசையில் தனது கணவருடன் கே.ஆர். விஜயா இணைந்திருக்கும் புகைப்படம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று அவர் கூறுகிறார். ஏனெனில், புகழ்பெற்ற மும்பை புகைப்படக் கலைஞரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறையில் எங்கு இருந்து பார்த்தாலும், இப்புகைப்படம் நம்மை பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற தோற்றம் அளிக்கும் என்று கே.ஆர். விஜயா தெரிவித்துள்ளார். இப்புகைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு விருதுகளும் அவரது வீட்டை அலங்கரிக்கின்றன.