இலங்கை
அமெ. வரிச் சிக்கலுக்கு தீர்வை முன்வையுங்கள்; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து
அமெ. வரிச் சிக்கலுக்கு தீர்வை முன்வையுங்கள்; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து
அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பரஸ்பரத் தீர்வை வரி தொடர்பாக அமெரிக்காவுடன் பேசுகிறோம், பேசுகிறோம் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா. நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பிரச்சினை உள்ளதை நாங்களும் அறிவோம். தீர்வையே நாம் கேட்கின்றோம். அரசாங்கத்தின் தாமதம் தொழில் முறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
இலத்திரனியல் வணிகக் கட்டமைப்பில் தோற்றம் பெற்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். அந்தத் தீர்வுகள் என்னவென்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.
ஏற்றுமதிச் சேவைகளுக்கும், சர்வதேச நிறுவனங்களின் தேசிய சேவைகளுக்கும் புதிதாக வரி அறவிடப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது. இதனால் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். டிஜிற்றல் பொருளாதாரம் தொடர்பாகப் பேசப்படுகிறது. ஆனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் டிஜிற்றல் சேவைகளுக்கும் வரி அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரிக் கொள்கையை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டால் எவ்வாறு டிஜிற்றல் பொருளாதாரத்தை முன்னேற்றமுடியும்? – என்றார்.