பொழுதுபோக்கு
குடிகாரனுக்கு ஒரு பாட்டு; பாராட்டி பரிசு கொடுக்க வந்து ஏமாற்றிய கண்ணதாசன்: எம்.எஸ்.வி ஷாக்!
குடிகாரனுக்கு ஒரு பாட்டு; பாராட்டி பரிசு கொடுக்க வந்து ஏமாற்றிய கண்ணதாசன்: எம்.எஸ்.வி ஷாக்!
தமிழ் சினிமாவில் லெஜண்ட் காம்போவாக இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள கண்ணதாசன் – எம்.எஸ்.வி கூட்டணியில் உருவான ஒரு பாடல் கம்போசிங்கின்போது நடந்த சம்பவம் குறித்து ஒரு நிகழ்ச்சியின் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டால் அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசு கண்ணதாசன் கூட்டணியில் உருவான பல பாடல்களை சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். அதேபோல் இவர்களுக்கு இடையேயான உறவு தமிழ் சினிமாவில் இன்றும் பெருமையாக பேசப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது.மேலும் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்த காதல் மன்னன் படத்தில் கூட அவர் கவியரசு கண்ணதாசன் குறித்து புகழ்ந்து பேசி நடித்திருப்பார். படத்தில் அவர் வைத்திருக்கும் மெஸ்க்கு கூட கண்ணதாசன் மெஸ் என்றே பெயரிட்டிருப்பார். இவர்களுக்கு இப்படி ஒரு நட்பு இருந்தாலும் எம்.எஸ்.வி கண்ணதாசன் இடையே சில சுவாரஸ்யமாக சம்பவங்களும் நடந்துள்ளது.அந்த வகையில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியான நீதி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கான மெட்டை எம்.எஸ்.வி போட்டு கொடுத்துள்ளார்.இதை கேட்ட கண்ணதாசன் என்னடா இப்படி போட்டா நா எப்படி வார்த்தைகளை போடுவது, நீதான் மெட்டு போட்டு விட்டு அதற்கு டம்மி வார்த்தைகளை கொடுப்பல, இதற்கு அப்படி ஏதாவது வார்த்தை வச்சிருக்கியா என்று கேட்டுள்ளார். அப்போது எம்.எஸ்.வி ‘’இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம், இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ என்று பாடியுள்ளார்.இதை கேட்டு ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் சூப்பர் என்று கூறி தனது பாக்கெட்டில் கையை விட்டு பணம் எடுத்தால் அதில் ரூ10 இருந்துள்ளது.அதை எம்.எஸ்.வியிடம் கொடுக்க வந்த கண்ணதாசன், ஒரு சின்ன திருத்தம் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டான். அதனால் அதை நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாற்றிக்கொள் என்று கூறியுள்ளார். கண்ணதாசனின் பேச்சை கேட்ட எம்.எஸ்.வி நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியடி தங்கம். இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் என்று பாடியுள்ளார். இதை கேட்டு அனைவரும் பாராட்டியுள்ளனர்.அப்போது எம்.எஸ்.வி கண்ணதாசனிடம் அந்த பரிசு ரூ10 கேட்டபோது, கண்ணதாசன் பாடலில் முக்கியமான வார்த்தையை நான் தான் மாற்றினேன் உனக்கு பரிசு தர முடியாது போடா என்று சொல்லிவிட்டதாக எம்.எஸ்.வி நகைச்சுவையுடன் கூறியுள்ளார் .