இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியில் 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ; 54 எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழியில் 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ; 54 எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் நேற்றுடன் இரண்டாம் கட்ட அகழ்வு 14வது நாளை எட்டியுள்ள நிலையில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் கட்டம் முன்பே 9 நாட்களில் நிறைவு பெற்றது. இதுவரை இரண்டு கட்டங்களையும் சேர்த்து மொத்தமாக 23 நாட்களாக அகழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு , அதில் 54 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வுப் பணிகள் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அவரது தொல்லியல் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பிரணவன் செல்லையா மற்றும் அவரது குழுவினரின் பங்கேற்பில் நடைபெற்றது.
மேலும், கொழும்பு, கராபிட்டிய மற்றும் றாகம மருத்துவமனைகளில் இருந்து வந்த ஆறு சட்ட வைத்திய அதிகாரிகளும் அகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
மேலதிகமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்த தொல்லியல் மாணவர்களும் அகழ்வில் பங்கேற்றனர்.
நேற்றைய அகழ்வில் ஒரு சிறுமியின் ஆடைகள் சில, ஒரு ரப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட அகழ்வு இன்றுடன் தற்காலிகமாக நிறைவடைய உள்ளது. ஆனால் விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.