இலங்கை
ஏமாற்றப்படும் பட்டதாரிகள் ; அர்சுனா எம்.பி குற்றச்சாட்டு
ஏமாற்றப்படும் பட்டதாரிகள் ; அர்சுனா எம்.பி குற்றச்சாட்டு
வேலைவாய்ப்பு விடயத்தில் உள்வாரி பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய ஜனாதிபதி உட்பட தாங்களும் எங்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி இருந்தீர்கள் அண்மைய தினத்தில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 1756 பட்டதாரி மாணவர்களுக்கு சிறப்பு அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அரசாங்கத்தினால் சொல்லப்பட்டது.
ஏற்கனவே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஒரு உயர் கல்வியை முடித்து அதன் பின்னர் வருடக் கணக்காக எங்களுடைய முதலாவது நியமனத்திற்காக காத்திருக்கும் நாங்கள் மீண்டும் ஒரு பரீட்சை ஒன்றை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அதே நேரம் தங்களுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் அதிபராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறுக்கு வழியில் நியமனங்களை பெற்றுக் கொடுக்க முனைவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அதே நேரம் மேல் மாகாணத்தில் அரசாங்க பட்டதாரிகள் அல்லாத தனியார் பட்டதாரிகளுக்கு தாங்கள் வேலை வாய்ப்பினை வழங்கியிருப்பது இந்த நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான ஊழல் தொடர்பான செய்தியாக போய் சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவ்வாறான முறையற்ற நியமனங்களை இந்த அரசாங்கம் வழங்குகின்ற அதே சந்தர்ப்பத்தில் உள்வாரி பட்டதாரிகள் ஆகிய நாங்கள் வருடக் கணக்காக பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.