வணிகம்
ஃபோக்கஸ் பண்ணல… பிஸினஸ்க்கு பணம் தேவையே இல்ல: ஏர்செல் சாம்ராஜ்யம் சரிந்தது இப்படித்தான்!
ஃபோக்கஸ் பண்ணல… பிஸினஸ்க்கு பணம் தேவையே இல்ல: ஏர்செல் சாம்ராஜ்யம் சரிந்தது இப்படித்தான்!
ஏர்செல் நிறுவனத்தை உருவாக்கிய சிவசங்கரன், தனது அனுபவங்கள் குறித்து பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில், ஏர்செல் நிறுவனத்தின் வீழ்ச்சி மற்றும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டிய பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, தொழில் மற்றும் வாழ்க்கை குறித்த பல அரிய நுண்ணறிவுகளை அவர் எடுத்துரைக்கிறார். அந்த வகையில், தொழில்முறை பயணம், நிதித் தத்துவம் மற்றும் வணிக உத்திகள் போன்றவை குறித்த ஆழமான பார்வை இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.தனது பயணத்தை ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக சிவசங்கரன் தொடங்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டிற்கு போட்டியாக இருந்த சரவணா இன்ஜினியரிங் நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். புதிய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக பொறியியல் துறையில் இருந்து தொழில்முனைவராக அவர் மாறி இருக்கிறார்.அதன்படி, “நுகர்வோர், லாபம், போட்டி மற்றும் கவனம் ஆகியவை தொழிலில் மிக முக்கியம். இந்த 4 விஷயங்களையும் சரியாக கையாண்டால் வெற்றிகரமாக தொழில் செய்யலாம். தொழிலுக்கு பணம் தேவை இல்லாத ஒன்று. உங்கள் ஐடியா சரியாக இருந்தால் மற்றவர்கள் உங்களுக்காக முதலீடு செய்வார்கள்.ஆடம்பரமான வாழ்க்கை வாழ அல்லது உயர்தர உணவை உண்ண பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தொழிலில் மூலதனத்தை உயர்த்துவது முக்கியமான திறன். மற்றவர்கள் நமக்காக முதலீடு செய்யும் அளவிற்கு நமது தொழில் திட்டம் இருக்க வேண்டும்.முதலில் ஒரு விஷயத்தை தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். அப்போது தான் அதனை நோக்கி நம்மால் பயணிக்க முடியும். அந்த ஆசை தான் இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, தோல்வி, வெற்றி என அனைத்திற்கும் காரணம். எனது பொருட்கள் அனைத்தும் மக்கள் தேவை சார்ந்தது. அதனால், அவற்றை நான் விற்பதில்லை; மக்களே வாங்குகின்றனர்.ஒரு நேரத்தில் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், நான் கவனம் செலுத்தவில்லை. இதுவே ஒரு வகையில் ஏர்செல் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது. இதனால் ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி நஷ்டமடைந்தது. எனினும், அது குறித்து நான் வருத்தப்படவில்லை. அடுத்தகட்ட நகர்வுகளை திட்டமிட்டு பணியாற்றுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.