இலங்கை

திருகோணமலையில் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!

Published

on

திருகோணமலையில் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எம்.எச். யூசுப்  மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், திங்கட்கிழமை (14) கந்தளாய் பகுதியில் வைத்து, மேற்கொள்ளப்பட்டதோடு, குறித்த, கொலை மிரட்டலையும் தாக்குதல் முயற்சியையும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலே மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

குறித்த ஊடகவியலாளர், அன்றைய தினம் இரவு 11 மணியளவில், தனது பகுதி நேர தொழிலான, சிசிரிவி கமரா பொருத்தும் பணியில், கந்தளாய் நகரில் ஈடுபட்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த நேரத்தில், இருவர் அவரிடம் வந்து முதலில் தீப்பெட்டி கேட்டுள்ளனர். “இல்லை” என பதிலளித்ததன் பின்னர், “பொய்யான செய்திகளை ஊடகங்களுக்கு பரப்புகிறாய்” என குற்றம்சாட்டி, கடுமையான வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர், அவர்களில் ஒருவர் உடனடியாக அவரை தாக்க முயன்ற நிலையில், அருகிலிருந்த கடை உரிமையாளரும், பெண் ஒருவரும் ஊடகவியலாளருக்கு உடனடி பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

Advertisement

இதனையடுத்து, அவர் கந்தளாய் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தீத்தாந்தட்டி பகுதியில் நடந்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக, “சட்டவிரோத மணல் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்களோடு , 7 பேர் கைது!” என்ற தலைப்பில் இவர் அறிக்கையிட்ட செய்தி தேசிய தொலைக்காட்சிகளிலும், இணைய தளங்களிலும் ஒளிபரப்பானது.

மேலதிக விசாரணையில் இந்த செய்தியை வெளியிட்டதன் காரணமாகவே, தனக்கு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்                                     .

Advertisement

சமூக விரோத செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version