இலங்கை
ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா?
ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா?
ஆடி மாதம் பிறந்து விட்டாலே அனைத்து அம்மன் கோவில்களிலும், குறிப்பாக மாரியம்மன் கோவில்களில் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள்.
கூழ் ஊற்றுவது, பொங்கல் வைப்பது, விரதம் இருப்பது, பொங்கல் வைப்பது, மாவிளக்கு வைப்பது, தீ மிதிப்பது என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அம்மனை வழிபடுகிறார்கள். அம்மனின் அருளை பெறுவதற்காக பலரும் விரதம் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது உண்டு.
ஆடி மாதத்தில் மட்டும் அம்மனை இவ்வளவு சிறப்பாக விழா எடுத்து கொண்டாடுவதற்கு என்ன காரணம்? ஆடி மாதத்திற்கும் அம்மன் வழிபாட்டிற்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கிறது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு புராணங்களில் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது, தன்னுடைய தவத்தின் வலிமையால் தேவர்களிடம் இருந்து தெய்வாம்சம் கொண்ட பசுவான காமதேனுவை வரமாக பெற்றவர் ஜமதக்னி முனிவர்.
பாற்கடலில் இருந்து தோன்றி, கேட்பவர்களுக்கு கேட்கும் வரங்களை குறைவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் தன்மை கொண்டது தான் காமதேனு.
இதை தேவர்களிடம் இருந்து பெற்று, தன்னுடைய ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவுகளை அளித்து உபசரித்து வந்தால் ஜமதக்னி முனிவர்.
இவரின் மனைவி தான் ரேணுகா தேவி. ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக பிறந்தவர் தான் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக பிறந்த பரசுராமர்.
சப்தரிஷிகளில் ஒருவராக விளங்கும் ஜமதக்னி முனிவரிடம் இருக்கும் காமதேனுவின் அற்புத மகிமையை தெரிந்து கொண்ட கார்த்தவீரிய அர்ஜூனனின் மகன்கள், காமதேனுவை தங்கள் வசமாக்க திட்டமிடுகிறார்கள். காமதேனுவை தங்களிடம் ஒப்படைக்கும் படி ஜமதக்னி முனிவருக்கு அவர்கள் உத்தரவிடுகிறார்கள்.
அதை தர அவர் மறுத்ததால், முனிவரை கொன்று விட்டு, காமதேனுவை அவரிடம் இருந்து அபகரித்து செல்கிறார்கள். பதிவிரதையான ரேணுகா தேவி, தனது கணவர் கொல்லப்பட்ட உடன், தனது உயிரை விட நினைத்து, தீ மூட்டி அதில் குதிக்கிறாள்.
ஆனால் தெய்வாம்சம் கொண்ட பத்தினி பெண்ணான அவளின் பெருமைகளை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என நினைத்த தேவர்களின் தலைவனான இந்திரன், வருண பகவானை மழையாக பெய்யும் படி சொல்கிறார்.
மழை பெய்து ரேணுகா தேவியின் உடலை எரித்த நெருப்பை அணைக்கிறது. உடலில் தீக்காயங்கள் மற்றும் பொப்புளங்களால் வேதனைப்பட்ட ரேணுகா தேவிக்கு அப்பகுதியில் வசித்த மக்கள் வேப்பிலையால் விசிறி அவளின் உடல் எரிச்சலை போக்குகிறார்கள். அவளுக்கு கூழ், இளநீர் போன்றவற்றை உணவாக கொடுத்து அவளின் நோயை குணமாக்க முயற்சிக்கிறார்கள்.
இருந்தும் தீக்கொப்புளங்களால் வேதனைப்பட்ட ரேணுகா தேவி முன் தோன்றிய சிவ பெருமான், பார்வதியின் அம்சமாக விளங்கும் உனக்கும் நோய்களை தீர்க்கும் தன்மையை வரமாக தருகிறார் சிவ பெருமான்.
ரேணுகா தேவியும் தெய்வமாக இருந்து தன்னை வணங்குபவர்களின் நோய்கள் அனைத்தையும் போக்கி, தாயாக இருந்து வேண்டும் வரங்களை அளிக்கிறாள்.
ரேணுகா தேவியே ஊர் காவல் தெய்வமாக எல்லையம்மனாகவும், மாரியம்மனாகவும் பல இடங்களில் கோவில் கொண்டு அருள் புரிகிறாள். ரேணுகா தேவிக்கு சிவ பெருமான் வரமளித்த ஆடி மாதமே அவளை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக மாறியது.
அன்று முதல் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் முக்கியத்துவம் சிறப்பு மிகுந்ததாக மாறியது.