இலங்கை
கடலட்டை உற்பத்தி அதிகரித்தால் சூழல் சமநிலை சீர்குலையும்; ஆளுநர் சுட்டிக்காட்டு
கடலட்டை உற்பத்தி அதிகரித்தால் சூழல் சமநிலை சீர்குலையும்; ஆளுநர் சுட்டிக்காட்டு
வடக்கு மாகாணத்திலிருந்து கடலட்டையின் ஏற்றுமதிகள் இரட்டிப்பாகியுள்ளன. எனினும் கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோதமான நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலை சீர்குலையும் என்று வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சினமன்குளோபல் நிறுவனம், யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எங்களுடைய கடற்கரைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. சட்டவிரோதமான வர்த்தகத்துக்கானமையப் புள்ளியாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது. எமது கடலோரப்பகுதியின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட கடல் சரணாலயங்களாகக் குறிக்கப்படவேண்டும். அங்கு. மீன்பிடித்தல் உள்ளிட்ட எந்தவொரு விடயங்களும் அனுமதிக்கப்படக்கூடாது. இந்தப் பகுதிகள் கடல் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுக்க உதவும்.
சுற்றுச்சூழல் தரவுகளைப் பயன்படுத்தி, நிலையான கடலட்டைப் பண்ணை எங்கு நடக்கலாம், எங்கு தவிர்க்கப்படவேண்டும் என்பதை நாம் அடையாளங்காண வேண்டும். பண்ணைகளை நவீனமயமாக்குவதற்கும், கண்டறியும் தன்மையை மேம்படுத்துவதற்கும் டிஜிற்றல் கருவிகளைப் பயன்படுத்துதல், நிலையான மீன்வளர்ப்புக் குறித்த தொழிற்பயிற்சி மையங்களைத் தொடங்குதல், விவசாயிகளுக்குத் தொடர்ச்சியான கற்றலை வழங்குதல் என்பனவற்றை முன்னெடுக்கலாம்- என்றார்.