இலங்கை
பணி நேரத்தில் மருத்துவர் தூங்கியதால் பறிபோன உயிர்!
பணி நேரத்தில் மருத்துவர் தூங்கியதால் பறிபோன உயிர்!
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், பணி நேரத்தில் மருத்துவர் ஒருவர் தூங்கியதால் நோயாளிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், இந்த அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மீரட் மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு மருத்துவர், மேசை மீது கால்களை வைத்துக்கொண்டு அலட்சியமாக உறங்கி கொண்டிருந்தார்.
அதே சமயத்தில், ரத்த வெள்ளத்தில் காயமடைந்த ஒரு நோயாளி அருகில் சக்கர நாற்காலியில் கவனிக்கப்படாமல் கிடந்துள்ளார்.
நோயாளியின் உறவினர்கள், விபத்து காயங்களுடன் வந்த தங்கள் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் தூங்கி கொண்டிருந்ததாகவும், அவரை எழுப்பியும் அவர் எழும்பவில்லை என்றும், இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவ அலட்சிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அலட்சியத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.