இலங்கை
புதைகுழிகளின் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் அரசு; எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்து
புதைகுழிகளின் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் அரசு; எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்து
உண்மைகளை மூடிமறைத்து இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது. அதனால் புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
செம்மணிப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக் குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இங்கு நடைபெறும் அகழ்வுப் பணிகளில் குழந்தைகள், வயது குறைந்தவர்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. எலும்புக் கூடுகள் அசாதாரணமாக சூழ்லில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். மனித புதைகுழிகள் கொக்குத் தொடுவாய்,மன்னார். மாத்தளை தெற்கிலும் சில இடங்களில் அடையாளங்காணப்பட்டிருந்தன. புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளபோதும், அவை தொடர்பில் ஆய்வு செய்யக்கூடிய பொறிமுறைகள் இலங்கையில் இன்னமும் இல்லை. ஆகையால் சர்வதேச நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அகழ்ந்து எடுக்கப்படும் எலும்புக்கூடுகளை முறையாகப் பாதுகாப்பதற்குக்கூட சர்வதேசநிபுணத்துவ மேற்பார்வை வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளைக் கண்டறிய சர்வதேச நிபுணர்களை நட்டுக்கு அழைத்து, அவர்களிடம் புதைகுழி விவகாரங்களைக்கையளித்து, எவ்வித தலையீடுகளும் இன்றி அவர்கள் சுயாதீனமாகச் செயற்பட்டு அதுதொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.